வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

வெள்ளி, 6 மார்ச், 2015

உண்மையை மறைக்கும் முதல்வரின் அறிக்கை தேன்கனிக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் உ.வாசுகி கண்டனம்





கிருஷ்ணகிரி, மார்ச் 5-
வாய்பேச இயலாத சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் அளித்த அறிக்கை முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல் உள்ளதாக கூறிய உ.வாசுகி அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.தேன்கனிக்கோட்டை வட்டம் கீழ் கொச்சாவூரில் கடந்த டிசம்பர் 25 அன்று காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி சிறுமி சமூக விரோதிகளால் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார்.
காவல்துறையின் திசை திருப்பும் நடவடிக்கைகளை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (மார்ச் 4) ஆர்ப்பாட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு கட்சியின் வட்ட செயலாளர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் பி.ஜான்சிராணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
அப்போது உ.வாசுகி கூறியதாவது:-இங்கு ஒரு வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமிக்கு எதிராக நடந்துள்ள கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் நியாயம் கிடைக்க வேண்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இது போன்ற அநீதிகளுக்கு எதிராக மற்ற கட்சிகள் போராடாத போது மாறுபட்ட ஒரு கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை செய்கிறது.ஓசூரில், ராஜஸ்தானை சேர்ந்த 2 பெண்களும் 2 சிறுமிகளும் காவல் கட்டுப்பாட்டு அறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள். உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து அவர்கள் நால்வருக்கும் 12 லட்சம் ரூபாய் கிடைக்க உதவினோம்.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் பழங்குடியின பெண்கள் அடக்கு முறை மற்றும் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக நின்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலைவாழ் மக்கள் சங்கமும் தான் 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராடி நியாயம் கிடைக்கச் செய்தது இந்த கட்சி. வாச்சாத்தி மக்கள் பாதிக்கப்பட்ட போதும் தமிழக சட்டமன்றத்தில் மறுத்தவர்கள் அதிமுகவினர். இதே பகுதியில் தளி காவல் நிலையத்தில் ஆய்வாளரால் ஆசிரியை ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் அதிமுக ஆட்சியில் தான் நடந்தது. தேர்தல் ஆதாயத்துக்காக அதை பயன்படுத்திய திமுக அந்த பெண்ணின் இரட்டை பெயரை குறிப்பிட்டு இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டதாக சுவரொட்டி வெளியிட்டது.
அந்த அளவில் தான் மற்ற அரசியல் கட்சிகளின் அக்கறை உள்ளது. இப்போதும் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்துள்ள கொடுமைகளை மூடி மறைக்கும் முயற்சியாக அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை தமிழக முதல்வர் அறிக்கையாக படித்துள்ளார். அந்த தவறான அறிக்கையை தமிழக முதல்வர் திரும்ப பெற வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் லட்சக்கணக்கில் பணம் தருவதாக காவல்துறையினர் கூறியும் அதை ஏற்காமல் தனது மகளுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்கும் அந்த பெற்றோர்களை பாராட்ட வேண்டும்.
பெண்கள் பாதிக்கப்படும் போது உடனடியாக நேரில் சென்று அதிகாரிகளை அழைத்துப் பேசி நியாயம் கிடைப்பதற்கு உதவத்தான் மகளிர் ஆணையம் என்கிற சட்டப்பூர்வமான அமைப்பை போராடி பெற்றுள்ளோம். ஆனால் தமிழக அரசு 90 வயதான மூதாட்டியை மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமித்து அதன் பணிகளை முடக்குகிறது. ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்தால் பல சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. எல்லா நேரத்திலும் மக்களை ஏமாற்ற முடியாது. இலவசங்கள் எப்போதுமே அதிமுகவுக்கு ஓட்டுக்களை பெற்றுத்தரும் என கனவு காண வேண்டாம். கடந்த காலங்களில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் அதிமுக தோல்வி கண்ட வரலாறு உள்ளது.
புதுதில்லியில் நடந்த பாலியல் கூட்டு வல்லுறவு சம்பவத்துக்கு பிறகு சட்ட திருத்தம் கொண்டு வர ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த குழுவின் முன்பு ஆஜராகி பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான்.இவ்வாறு வாசுகி பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பகுதியில் இது போன்ற ஏராளமான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. அவற்றை ஒரு நீதிபதி தலைமையில் ஊடகதுறையினர், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினரை கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி பேசுகையில், குற்றவாளிகள் தப்பிக்க உதவும் வகையில் தேன்கனிக்கோட்டை, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் மற்றும் அஞ்செட்டி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்தினர். மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்ட அறிவிப்பு செய்த பிறகு ஆறு நாட்கள் கழித்து டிசம்பர் 31 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது தந்தையையும் காவல் துறையினர் நடத்திய விதம், விசாரணை என்கிற பெயரால் உண்மையை மூடி மறைக்க மேற்கொண்ட முயற்சிகள் வரிசையாக அம்பலமாகின.
சிறார் பாதுகாப்பு சட்டத்திற்கு மாறாக அவர்கள் செயல்பட்டனர். அதை தொடர்ந்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் சிறுமியின் தந்தை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது தமிழக முதல்வர் ஒரு அறிக்கை அளித்தார். அது ஏற்கனவே இந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உண்மைக்கு மாறாக கூறி வரும் நடவடிக்கைகளின் தொகுப்பாகவே உள்ளது என்று தெரிவித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சேகர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.டி.சங்கரி மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட சுமார் 500 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி தீக்கதிர்


சர்வதேச மகளிர் தினம்: சிபிஐ(எம்) வாழ்த்து1

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே’ என்ற பாரதிதாசனின் வரிகள், சமுதாயத்தின் சரிபாதி விடுதலை பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் அனைத்துவித பாகுபாடுகளையும் களைவதற்கான போராட்டங்களுக்கு சொந்தக்காரர்கள் என்ற முறையில் உலகெங்கிலும் உயர்ந்த லட்சியத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் பெண்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்நாளில் தன் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
முதலாளித்துவத்தின் இன்றைய முகமான நவீன தாராளமயம் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கும் வாழ்வாதாரத்துக்கும் எதிராக யுத்தம் நடத்துகிற காலம் இது. பொருளாதார பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி ஏறுமுகமாகவே இருக்கிறது. அனைத்தும் வணிகமயமாகும் சூழலில், இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வெட்டிச் சுருக்கப்படும் போது பெரும்பாலான குடும்பங்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றன. ஏற்கனவே சமமற்றதாக உள்ள பெண்களின் நிலை இதனால் மேலும் பின்தள்ளப்படுகின்றது.
சாதி வெறியும், மத வெறியும் திட்டமிட்டுக் கிளப்பப்படுகின்றன. இவற்றின் முக்கிய கூறாக ஆணாதிக்கம் நிலவுகிறது. பெண்களின் சம உரிமை கருத்தியலை இவை மறுதலிக்கின்றன. வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. சாதி, மத தாக்குதல்களில் தலித் மற்றும் சிறுபான்மை பகுதிகளைச் சார்ந்த பெண்கள் கூடுதல் பாதிப்புகளை சந்திக்கின்றனர். பண்டிகைகளும், வழிபாடும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துக்காக மதவெறி சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பெண்களும் இரையாகின்றனர், இலக்காகின்றனர். மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படும் பிஜேபி அரசாங்கத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு திசை வழி, சம நீதி, சமூகநீதி கோட்பாடுகளை சிதைக்கின்றது.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. கௌரவக் கொலைகள் பரவலாக நடக்கின்றன. குடும்ப வன்முறையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. காவல்துறையின் மனித உரிமை மீறல்களும் இக்காலத்தில் தொடர்கின்றன. மாற்றுத்திறனாளி பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் அதிகம் வெளி வந்து கொண்டிருக்கின்றன. போதை பழக்கம் வன்முறை அதிகரிப்பின் பின்புலமாக உள்ளது. சட்ட அந்தஸ்து கிடைத்தும் மாநில பெண்கள் ஆணையத்தின் செயல்பாடு முடங்கிக் கிடக்கிறது. அதே சமயம் நியாயம் கேட்டுப் போராட பெண்கள் முன்வருவதும் அதிகரித்திருக்கிறது.
கிராமப்புறங்களில் ஊரக வேலை சட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு சரிந்துள்ளது. சட்டத்தையே கிடப்பில் போடும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தொழிலாளர் நல சட்டங்கள் தளர்த்தப்படுவதும், சங்கம் வைக்கும் உரிமை மறுக்கப்படுவதும் பெண் தொழிலாளர்களைப் பெரிதும் பாதிக்கின்றன. ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பு பிற்போக்குக் கருத்தியலை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தடைகளை எல்லாம் தாண்டி, பல்வேறு துறைகளில் பெண்கள் முத்திரை பதித்து வருகின்றனர். அவர்களின் திறமைகளும், சாதனைகளும் சமூகத்திற்கு மறுக்க இயலாத பங்கினைச் செலுத்தி வருகின்றன.
தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் திமுக, அதிமுக போதை பழக்கத்துக்கு எதிராக, சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக, மதவெறிக்கு எதிராக, பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக வலுவான பிரச்சாரம் செய்வதற்குத் தயாராக இல்லை. அத்தகைய சமூக சீர்திருத்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பங்கினை நிச்சயம் செலுத்தும். இந்நிலையில், பல்வேறு நாடுகளில் ஜனநாயக மற்றும் வாழ்வுரிமை கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பெண்களின் பங்கு கணிசமாக உயர்ந்து வருகிறது. அரசாங்கங்களின் கருணையினால் எதுவும் நடப்பது கிடையாது, போராட்டம் தான் தீர்வுக்கான வழி என்ற புரிதலுடன் தமிழகப் பெண்களும் போராட்டக் களத்தில் நிற்கின்றனர். அவர்களுடன் இணைந்தும், வழிகாட்டியும் சமநீதிப் பாதையில் தடைகளைத் தகர்த்து முன்னேறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி ஏற்கிறது.