தீக்கதிர் செய்தி
தருமபுரி, ஜூன் 25-
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15 வது மாநில மாநாடுசெப்டம்பர் 23 முதல் 26வரை தருமபுரியில் நடைபெறவுள்ளது. மாநாட்டை சிறப்பாக நடத்த வரவேற்புக் குழு அமைப்புக்கூட்டம் மாவட்டசெயலாளர் எஸ்.கிரைஸாமேரி தலைமையில் ஞாயிறன்று (ஜூன் 25) நடைபெற்றது.மாவட்டத்தலைவர் ஆர். மல்லிகா வரவேற்றார்.அகிலஇந்திய துணைத்தலைவர் உ. வாசுகி, மாநிலத்தலைவர் எஸ். வாலண்டினா, மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாநிலச்செயலாளர் எஸ்.டி. சங்கரி,மாவட்ட துணைத்தலைவர்கள் கே.பூபதி, பி. கிருஷ்ணவேணி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஏ.ஜெயா, எஸ். அன்பு ஆகியோர் பேசினர். மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வியும், செயலாளராக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸா மேரியும், பொருளாளராக விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சோ.அர்ச்சுணன் உள்ளிட்ட 31 பேர் கொண்ட நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் மாநாட்டை சிறப்பாக நடத்த நிதிக்குழு,உணவுக்குழு, விளம்பரக்குழு என 14 குழுக்கள் உள்பட மொத்தம் 175பேர் கொண்ட மாநாட்டு வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. அகிலஇந்திய துணைத்தலைவர் உ. வாசுகி பேசுகையில், பெண்களை தொழிலாளர்களாக, ஊழியர்களாக பார்ப்பதில்லை.கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் பெண்ணை பெண்ணாக பார்க்காமல் போதைப் பொருளாகவும், இரண்டாம் பட்சமாகவும் பார்க்கும் நிலை உள்ளது. பெண்களின் திறமையை ஆணாதிக்க சமூகம் அங்கீகரிப்பதில்லை. சமுதாயத்தை மூடர் கூடமாக மாற்ற மூளை சலவை செய்யும் வேலையை மோடி அரசுசெய்கிறது. மூட நம்பிக்கையை புறம் தள்ளவேண்டும். மூடநம்பிக்கையை எதிர்க்கும் முற்போக்கு சக்திகளை திரட்டவேண்டும்.
மூடநம்பிக்கையை புறந்தள்ளவும் பெண்சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் மாநாட்டின் கருத்துபிரச்சாரம் அமையவேண்டும என்று கேட்டுக்கொண்டார்.சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா பேசுகையில், 1971 துவங்கப்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 1974 ல் திருவாரூர் மாவட்டத்தில் முதல்மாநாட்டை நடத்தியது. அப்போது தலைவராக கே.பி.ஜானகி அம்மாளும் செயலாளராக பாப்பாஉமாநாத்தும் தேர்வுசெய்யப்பட்டனர். இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் அமலாக்கப்பட்டது. கடந்த மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகம் முழுவதும் மதுக்கடையை பூட்டும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினோம். பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து கூட்டுப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றோம்.
பெண்களுக்காகவும் சமுதாயத்தின் அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியிருப்பதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி பேசுகையில்,மாநில மாநாட்டின் ஒருபகுதியாக செப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்றார். பொதுக்கூட்டத்தில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மாதர் சங்கத்தின் அகில இந்தியதலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். 15 வதுமாநில மாநாட்டை பறைசாற்றும் வகையில் 15 தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராட்டு விழா
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடையை அகற்றப் போராடிய பெண்கள், ஜோக்கர் படக்குழுவினர், கக்கூஸ் ஆவணப்படத்தை இயக்கிய திவ்யா பாரதி, முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளர் பிரித்திகா யாசினி மற்றும் மக்கள் பிரச்சனைக்காக போராடியவர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்படவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக