மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி உரையாற்றினார். (வலது) திருப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார்.
திருப்பூர்
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பெருந்திரளாகப் பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.இதில் திருப்பூர் மாவட்டச் செய லாளர் கே.காமராஜ் தலைமையில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் ஏ.ரங்கசாமி, ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பழனிசாமி ஆகியோர் கோரிக்கை யை வலியுறுத்தி பேசினர்.கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், செ.முத்துக்கண்ணன் மற்றும் பெருந்திரளான பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தற்போதைய ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது. கருத்தொற்றுமை என்ற சால்ஜாப்பு தேவையில்லை. ஆனாலும், சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இத்தனைக்கும் மோடி ஆட்சிக்கு வந்த உடன், குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தப்பட்டபோது, இந்த அரசு இச்சட்டத்தைக் கொண்டு வரும் என்றே கூறினார். ஆனாலும் செய்யவில்லை.
இம்மாதம் 17ஆம் தேதி துவங்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரிலேயே பெண்களுக்கு 33சதவீதம் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நிறைவேற்று என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்தில் 10 மையங்களில் மண்டல அளவிலான இயக்கம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு 6 பேரிலும் ஒருவர் பெண்
இக்கோரிக்கைக்கு நீண்ட போராட்ட வரலாறு உண்டு. தேச விடுதலைப் போராட்டத்தில் ஆண்களோடு, பெண்களும் களமிறங்கி போராடிய நிகழ்வுகள் ஏராளம் உள்ளன. அன்றைய காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கைதாகி சிறைச் சென்ற ஒவ்வொரு 6 பேரிலும் ஒருவர் பெண். அகிம்சை வழியிலான போராட்டம், சத்தியாகிரகங்கள், சிட்டகாங் ஆயுத கிடங்கைக் கைப்பற்றும் தீவிர போராட்டங்கள், சமூகச் சீர்திருத்த இயக்கங்கள், தெலுங்கானா, தேபாகா போன்ற நில உரிமைக்கான வர்க்கப் போராட்டங்கள் -என்று விடுதலை இயக்கத்தின் அனைத்து நீரோட்டங்களிலும் பெண்கள் பங்கேற்றனர். தலைமறைவு வானொலி நிலையத்தை உஷா மேத்தா என்ற பெண்மணி வெற்றிகரமாக நடத்தினார்.
சுதந்திரக் கொடியின் ஆரம்ப வடிவத்தை உருவாக்கியவர் மேடம் காமா என்ற பெண்மணி. இந்தப் பின்னணியில், விடுதலைப் பெற்ற பின், அரசியலைத் தீர்மானிக்கும் இடங்களில் பெண்கள் இயல்பாகவே பங்கு பெறுவர் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. சுதந்திரம் அடைந்து 28 ஆண்டுகளுக்குப் பின் பெண்களின் அந்தஸ்து குறித்த கமிஷன் ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டு 1975இல் அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப் பட்ட பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கை பலவீனமாக இருந்தது இதில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால் ஒதுக்கீடு என்ற பரிந்துரை அளிப்பதில் தயக்கம் இருந்தது. 1981இல் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா.வின் உலக பெண்கள் மாநாடு, சர்வதேச அளவில் அந்தந்த நாட்டு மக்கள் பிரதிநிதிகளில் பெண்களுக்கான இடங்கள் அதிகரிக்க திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் நியமன முறையை மேற்கொண்டன. இதர பல நாடுகளின் அனுபவம், ஒதுக்கீடு அல்லது கோட்டா என்ற அடிப்படையிலேயே பெண்களின் எண்ணிக்கை உயர்வதை சாத்தியமாக்கியது.
பெண்கள் அவர்களின் தகுதி, திறமையின் அடிப்படையில் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று வர வேண்டும் என்ற நிலைபாடு ஒரு புறமும், ஆணாதிக்கமயச் சூழலில் ஒதுக்கீட்டின் மூலமே அவர்கள் வர முடியும் என்ற நிலைபாடு மறுபுறமும் -என குறிப்பிட்ட காலம் பெண்கள் இயக்கங்களின் மத்தியிலேயே விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக ஒதுக்கீடு என்பது ஏற்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு முன் அது வலுவான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றைய வரைவுச் சட்டம் உருவானது வரை அவ்வளவு சுலபமாக நிகழ்ந்து விடவில்லை. ஏராளமான முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
மாற்று ஆலோசனைகளும் சீர்குலைவுச் செயல்களும்
துவக்கத்தில் நியமன முறை மூலம் பெண்களைக் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை நம் நாட்டிலும் எழுந்தது. ஜனநாயக மாதர் சங்கம் அதை முற்றாக நிராகரித்தது. தொகுதிகளில் 33 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பெண்கள் இயக்கங்களின் ஆலோசனை முன்னெழுந்தது. இதற்கு மாற்றாக இதர பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. உதாரணத்துக்கு, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் 33 சதவீத பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறின.
இது ஒரே தொகுதியில் ஒரு கட்சி ஆணையும், ஒரு கட்சி பெண்ணையும் வேட்பாளராக்குவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும், வெற்றி பெறுவது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், கண்டிப்பாக பெண் வெற்றியடைவார் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. அடுத்து, இரட்டை உறுப்பினர் என்ற யோசனை வந்தது. மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற ஆலோசனை! இது பெண்களின் திறமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
அடுத்து, காய்கறி வியாபாரம் போல், எதற்காக 33சதவீதம், ஒரு 10 அல்லது 15 சதவீதம் வைத்துக் கொள்ளுங்களேன் என பேரம் பேசப்பட்டது. 33 சதவீதம் என்ற எண்ணிக்கை சமூகவியலாளர்களின் வலுவான ஆய்வுக்குப் பின் அறிவியல்ரீதியாக எட்டப்பட்ட எண்ணிக்கை. மூன்றில் ஒரு பங்கு என்பது தீர்மானகரமான குரலாக ஒலிக்கும் என்ற அடிப்படையில் அதற்கு பதில் அளிக்கப்பட்டது. தொகுதிகளில் இட ஒதுக்கீடு செய்தால், அனைத்துக் கட்சிகளும் பெண் வேட்பாளரைத் தான் நிறுத்த முடியும், எந்த கட்சி வென்றாலும் ஒரு பெண்ணே அத்தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்படுவார், நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருப்பார்கள், எனவே இது தான் சட்டமாக வேண்டும் என்பது அனைத்துக்குமான பதிலாக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது.
இடதுசாரி இயக்கம் இக்கோரிக்கையில் வலுவாக நின்றது.அடுத்து, ஒதுக்கீடு என்ற பெயரில் குட்டை முடியும், லிப்ஸ்டிக்கும் அணிந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்கள் தான் தேர்வு செய்யப் படுவார்கள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சமஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் தலைவர்கள் இதில் இறங்கினர். 1996இல் தேவகவுடா ஆட்சியில் மசோதா, தாக்கல் செய்யப்பட்ட போது, நாடாளுமன்ற விவாதத்தில் ரகளை செய்தனர். மசோதாவைக் கிழித்து எறிந்தனர். இச்சட்டம் வராமல் தடுக்க வேண்டும் என்ற ஆணாதிக்க நோக்கமே இதில் பிரதிபலித்தது. நடை, உடை, பாவனை என்பது பிரச்சனையல்ல; அப்படியே பார்த்தாலும், கட்சிகள் தானே வேட்பாளரைத் தேர்வு செய்கின்றன; இதற்கும் ஒதுக்கீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று அவர்களுக்கு பதிலடி தரப்பட்டது.
ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடு
ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடு அல்லது உள் ஒதுக்கீடு என்பது ஒரு வலுவான மாற்றாக முன்வைக்கப்பட்டது. பெண்களுக்கு ஒதுக்கீடு என்று பொதுவாக இருந்தால் முற்பட்ட வகுப்பினரே இடம் பிடிப்பார்கள். எனவே, பிற்பட்ட வகுப்புக்கும், தலித் பழங்குடியினருக்கும் இந்த ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனை நீண்ட காலம் விவாதப் பொருளாக மாறியது. ஏற்கெனவே உள்ள தலித் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டுக்குள் மூன்றில் ஒரு பங்கு அப்பிரிவைச் சார்ந்த பெண்களுக்குக் கிடைக்கும் என்ற விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு, அப்படியானால் ஓபிசி (இதர பிற்பட்ட பிரிவினர்) பிரிவு பெண்களுக்கு இதை எப்படிப் பொருத்துவது, அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்பது தொடர்ச்சியான பிரச்சனையாக எழுந்தது.
தலித், பழங்குடியினருக்கு பொதுவான ஒதுக்கீடு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே இருப்பது போல, ஓபிசிக்கும் தேவை என்ற கோரிக்கை ஏன் எழவில்லை என்று பார்ப்பது மிக முக்கியமானதாகும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சமூக பின்புலத்தைக் கவனித்தால், கணிசமானவர்கள் ஓபிசி பிரிவுக்குள்ளிருந்து வந்தவர்களாகத் தான் இருந்தார்கள். எனவே தான் ஓபிசிக்கான பொது ஒதுக்கீடு வேண்டும் என்ற குரல் எழவில்லை. அதற்கான தேவை இல்லை. பொது ஒதுக்கீடு இல்லாத போது, பெண்களுக்கான ஒதுக்கீட்டில் மட்டும் இதைக் கொண்டு வருவதில் சிக்கல் எழும். அது மட்டுமல்ல, முதலாளித்துவ கட்சிகளில் ஓபிசியினர் வலுவாக இருக்கும் போது, அப்பிரிவுகளைச் சார்ந்த பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்படுவார்கள் என்பது யதார்த்தம்.
சுதர்சனம் நாச்சியப்பன் கமிஷன்
இருப்பினும் ஐமுகூ ஆட்சி காலத்தில், பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் குறித்து சுதர்சன நாச்சியப்பன் அவர்களது தலைமையில் பிருந்தா கராத் உள்ளிட்டவர்கள் இடம் பெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் வருகை தந்தது. தமிழகத்துக்கான பல்லாண்டு விவரங்களை எடுத்துப் பார்க்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் அநேகமாக பிற்பட்ட வகுப்பினர் தான் பெரும்பான்மையினராக இருந்தார்கள் என்பது தெரிய வந்தது.
சென்னைக்கு வந்த கமிஷன் முன், இவ்விவரங்களை முன்வைத்து, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் 33 சதவீத ஒதுக்கீடு சட்டமாக வேண்டும் என்ற வாதத்தை வலுவாகக் கட்டமைத்தோம். பிறகு அதுவே கமிஷனின் பரிந்துரையாக மாறியது. பிறகு நீண்ட நாள் அப்பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. கட்சிகளின் மத்தியில் கருத்தொற்றுமையை உருவாக்குகிறோம் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஐமுகூ அரசை ஆதரிக்கிற கட்சிகள் இதில் மாற்றுக் கருத்து வைத்திருந்தபடியாலும், ஆணாதிக்கப் பார்வையாலும் அரசியல் உறுதியுடன் ஐமுகூ நடந்து கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள், எந்தெந்த கட்சி எதிர்த்து வாக்களிக்கிறது என்று மக்கள் பார்க்கட்டும் என்று கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பில் கூறப்பட்டது.
முதலில் சட்டம் வரட்டும்...
இடதுசாரிகள் தொடர்ச்சியான அழுத்தத்தைக் கொடுத்ததன் காரணமாகவே குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் இந்த வாக்குறுதி இடம் பெற்றிருந்தது. திமுகவும் இதனை ஆதரித்தது. பாஜக கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாகவே உலா வந்தது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம், ஆனால் தொகுதிகளில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்பது தான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. தொடர்ந்து ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் இயக்கங்களின் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டே இருந்தன. முதலில் சட்டம் வரட்டும், அதில் ஏதும் பிரச்சனைகள் இருந்தால் திருத்தங்கள் கொண்டு வரலாம் என்று பெண்கள் இயக்கங்கள் கூறின. பிறகு 2010இல் 108வது அரசியல் சட்டத் திருத்தமாக மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவைக்கு வரவே இல்லை. 7 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
மோடி அரசு துரோகம்
தற்போதைய ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது. கருத்தொற்றுமை என்ற சால்ஜாப்பு தேவையில்லை . ஆனாலும், சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இத்தனைக்கும் மோடி ஆட்சிக்கு வந்த உடன், குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தப்பட்டபோது, இந்த அரசு இச்சட்டத்தைக் கொண்டு வரும் என்றே கூறினார். ஆனாலும் செய்யவில்லை. இந்த துரோகத்தைக் கண்டித்து, நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற அழுத்தத்தைக் கொடுக்கவே இந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் திட்டமிடப்பட்டிருக்கிறது. பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சர்வரோக நிவாரணி அல்ல என்பதை அறிந்தே இருக்கிறோம். ஆனாலும், சமூகத்தின் சரிபாதி, வாக்காளர்களிலும் கிட்டத்தட்ட பாதி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்றால் ஜனநாயகம் அதன் உள்ளார்ந்த பொருளை இழந்து நிற்கிறது என்பதே நிலை. எனவே தான் இக்கோரிக்கை நிறைவேறக் குரல் கொடுக்கிறோம்.
மத்திய- மாநில அரசின் கொள்கைகள்
அரசுகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும், நடவடிக்கைகளும் ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போது, பெண்களும் குடிமக்கள் என்ற முறையிலும், உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையிலும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவு அதிகரித்து வருகிறது. பொது பாதிப்புகளுடன் பெண்கள் சந்திக்கும் பிரத்தியேக பாதிப்புகளையும் முன்வைத்துப் போராட வேண்டும். பெண் சமத்துவத்தைத் தன் திட்டத்தின் ஓர் அம்சமாக முன்வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருக்கிறது, பெண்களின் பாதுகாப்பு, கல்வி வேலைவாய்ப்புக்கும், 33 சதவீத இடஒதுக்கீட்டை சட்டமாக்கவும் ஜூலை 15இல் களம் காண்போம் தோழர்களே!