ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு சிவகாசியில் பல்லாயிரம் தீப்பெட்டி - பட்டாசு தொழிலாளர்கள் பேரணி
தீக்கதிர் செய்தி
சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர் போராட்டத்தில் உ.வாசுகி உரையாற்றினார்.
சிவகாசி, ஜூலை10-
பட்டாசு உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் மத்திய அரசு 28 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனைக் கண்டித்தும், ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதமாக குறைத்திடக் கோரியும் சிஐடியு-தீப் பெட்டி பட்டாசுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிவகாசியில் திங்களன்று மாபெரும் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை யொட்டி சிவகாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள 800க்கும் மேற் பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இந்த அணிகளில் பணியாற்றும் பல்லாயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணி, இரட்டைப் பாலத்திலிருந்து துவங்கி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பேரணியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
டி.கே.ரங்கராஜன்கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்டச் பொதுச்செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மண்டல துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் விளக்கிப் பேசினர். முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந் துள்ள ஜி.எஸ்.டி வரியால், தமிழகம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தீப்பெட்டி, பட்டாசு, கைத்தறி, விசைத்தறி ஆகிய தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
அதில் பணிபுரிந்து வரும் ஒரு கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறு தொழில்களை நாட்டிலிருந்து அப்புறப்படுத்தக் கூடிய வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. இந்தியன் டூபாக்கோ கம்பெனி தீப்பெட்டி, அகர்பத்தி ஆகிய பொருட்களை தயாரித்து வருகிறது. இதேபோல் ஒவ் வொரு தொழிலையும், பன் னாட்டு கம்பெனியுடன் இணைக்கும் வேலை தான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. இதனால், நமது குழந்தைகளின் எதிர்காலம், கல்வி, சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்படும். ஏற்கனவே, 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாதுஎன்ற அறிவிப்பால், ஏராளமானசிறு குறு மற்றும் குடிசைத்தொழில்கள் பாதிக்கப்பட்டுள் ளன. வரும் ஜூலை 17 இல் நாடாளுமன்றம் கூட உள்ளது. அப்போது, ஜி.எஸ்.டி வரியால், பட்டாசுத் தொழிலின் பாதிப்பு பற்றி இதர கட்சிகளின் எம்.பி.க்களையும் இணைத்துக் கொண்டுஅவசியம் கோரிக்கை எழுப்புவோம். ஜி.எஸ்.டி என்பது பொருளாதார நடவடிக்கை அல்ல. இது ஒருஅரசியல் நடவடிக்கை. அம் பானி, அதானி, ஐ.டி.சி போன்றநிறுவனங்களுக்கு சேவை செய்வது தான் மத்திய அரசின் வேலையாக உள்ளது. உலக வங்கியும்,பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், லாபம் பார்ப்பதற்கும் எந்த தடையும் இருக்கக் கூடாதுஎன தொடர்ந்து கூறி வருகின் றன.
இதை பிஜேபி கொள்கை அளவில் ஏற்றுள்ளது. எனவே, அதை அமல்படுத்துகிறது. எனவே தான் இது அரசியல் நடவடிக்கை எனக் கூற வேண்டியுள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சிமெண்ட், தங்கம் ஆகியவற்றின் வரி குறைந்துள்ளது. ஆனால் கைத்தறி, கடலை மிட்டாய் போன்றவற்றின் விலை கூடியுள்ளது. மக்களை ஓட்டாண்டி ஆக்குவது தான் இத்திட்டம். அரிசியாக இருக்கும் போது வரி கிடையாது. ஆனால், அது இட்லியாக மாறும் போது வரிஉண்டு. ஹோட்டலில் சாப்பிட்டால் 18 சதவீத வரி. பஞ்சுக்கு வரி இல்லை. ஆனால் அது துணியாக, நூலாக, சட்டையாகவும், அதில் பட்டன் வைத்தாலும், பின்பு, அந்தச் சட்டைக்கு கம் பெனி பெயர் வைத்தாலும் வரி தான். இது தான் ஜி.எஸ்.டி.பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தொழிலாளர்களுடன் இணைந்து தொடர் போராட் டங்கள் நடத்தினால், நிச்சயம் வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக