தீக்கதிர் செய்தி
பொய் வழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை
மாதர் சங்க மாநாட்டில் உ.வாசுகி பேச்சு
பொய் வழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை
மாதர் சங்க மாநாட்டில் உ.வாசுகி பேச்சு
தாராபுரம், ஜூலை 6 -
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராடும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மீது போடப்டும் பொய் வழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை என திருப்பூர் மாவட்ட மாநாட்டில் உ.வாசுகி பேசினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு புதனன்று பொங்கலூரில் துவங்கியது. இம்மாநாட்டையொட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி பொங்கலுர் காட்டூர்ரோடு பகுதியில் இருந்து புறப்பட்டு பொதுக்கூட்ட திடலை (செல்வி நினைவரங்கம்) அடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் எஸ்.பவித்ராதேவி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பங்கேற்று பேசுகையில்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களாக இருந்த கே.பி.ஜானகி அம்மாள், பாப்பா உமாநாத் போன்றோரின் அர்ப்பணிப்பு மிக்க வழிகாட்டுதல்களோடும், மதுரையில் ரவுடிகளின் காட்டுத் தர்பாரை எதிர்த்தும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராடி உயிர்நீத்த லீலாவதி உள்ளிட்ட தியாகிகளின் நெஞ்சுரத்தோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பீடு நடைபோட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட 15வது மாநாடு எழுச்சிமிக்க பேரணியோடு துவங்கி நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள், அடிப்படை பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதோடு களத்தில் நின்று போராடும் இயக்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையை முடக்கோரி மாதர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களை சகித்துக்கொள்ள முடியாத தமிழக அரசு மாதர் சங்க நிர்வாகிகள் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர். இந்த வழக்குகளுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. எத்தனை வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொண்டு டாஸ்மாக் கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். மாதர் சங்க பேரணிகளை வீடியோ எடுக்க வரும் காவலர்கள் சினிமா ஒளிப்பதிவாளர்களை போல சுற்றி, சுற்றி வந்து பேரணியில் வருபவர்களை வீடியோ எடுத்து மறைமுக அச்சுறுத்தலில் ஈடுபடுகின்றனர். இதற்கெல்லாம் அஞ்சி முகம் காட்ட மறுப்பவர்கள் நாங்கள் அல்ல. மேலும், காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்காக முதலில் குரல் கொடுப்பது மாதர் சங்கம்தான்.
ஆனால் காவல்துறையில் குறிப்பாக மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மாதர் சங்க நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. குறிப்பாக, அவினாசிபாளையம் காவல் நிலையத்திற்கு செல்லும் நிர்வாகிகளை அங்கு பணிபுரியும் அதிகாரி, கட்டப்பஞ்சாயத்து செய்கிறீர்கள் என்று கூறுகிறார். ஆனால் உண்மை என்ன என்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நாங்கள் சட்டப் பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அது பொறுக்காத காவல்துறையினர் அவதூறு பேசுகின்றனர். அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக சென்ற மாதர் சங்க நிர்வாகியை உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர், காவல் நிலையத்தை விட்டு வெளியேறச் செய்து அவமரியாதை செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அந்த அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை உடனடியாக எடுத்திட வேண்டும்.மேலும், கடும் பொருளாதார சூழலில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் குறிப்பாக பெண்கள் ரேசன் கடைகளை நம்பியுள்ளனர். ஆனால் ரேசன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. பருப்பை பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மண்ணெணெய் கண்ணில் காண்பிப்பதோடு சரி. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உடனடியாக அதை சீர்செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், 100 நாள் வேலைத் திட்டத்தை பேருராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாதர் சங்கம் போராடி வருகிறது. ஆனால் தமிழக அரசு மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. அதிமுக பல கோஷ்டிகளாக பிரிந்து உள்ளது.
இதனால் உட்கட்சி பிரச்சினைகளை கவனிப்பதற்கே முதல்வருக்கு நேரம் போதவில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசு,மக்கள் மீது பல்வேறு வழிகளில் தாக்குதல்களை தொடுத்து வருகிறது. பண மதிப்பு இழப்பின்போது வேலையை விட்டு விட்டு உழைக்கும் மக்கள் வங்கி வாசலில் காத்து கிடந்தனர். இப்போது சீரற்ற ஜிஎஸ்டி வரியால் ஏழை, எளிய மக்கள் பல்வேறு வகையில் சிரமத்திற்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து சாதி, மதம், ஏற்றத் தாழ்வுகளை கடந்து ஒற்றுமையாக போராடினால் மட்டுமே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில துணை செயலாளர் எம்.கிரிஜா, மாவட்ட செயலாளர் ஜி.சாவித்திரி, மாவட்டத்தலைவர் அங்குலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் ஆர்.மைதிலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வசந்தி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக